அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான படம் சித்தா. இந்த படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் கமலஹாசன் வெளியிட்டு இருந்தார். பெங்களூரில் வைத்து சித்தா படம் தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் நடிகர் சித்தார்த் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென உள்ளே நுழைந்த கனடா அமைப்பினர் தகராறு செய்து காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக பந்த் நடந்து கொண்டிருக்கும் நிலையில் இதெல்லாம் தேவையா? உடனே பத்திரிகையாளர் சந்திப்பை நிறுத்துங்கள் எனக்கூறி கோஷம் எழுப்பி உள்ளனர். இதனால் நன்றி தெரிவித்துக் கொண்டு சித்தார்த் மேடையில் இருந்து கீழே இறங்கி சென்றார்.

இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் சித்தார்த்தின் திரைப்பட விழாவில் கனடா அமைப்பினர் தகராறு செய்த சம்பவத்திற்காக அனைத்து கன்னடர்கள் சார்பிலும் நான் மன்னித்து கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட பிரகாஷ்ராஜ் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என ஏராளமான மொழிகளில் நடித்துள்ளார். இவர் அவ்வபோது தனது சமூக வலைதள பக்கத்தில் justasking என்ற ஹேஸ்டேக் கீழ் அரசியல் கருத்துக்களை பதிவிடுவது வழக்கம்.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் பிரகாஷ் பதிவிட்டதாவது, “ஆம் அவை எங்களுடைய அரசியல் கட்சிகள் தான். பல ஆண்டுகளாக பிரச்சனையை தீர்க்க முடியாத கட்சிகள். அதற்கு காரணமான தலைவர்களை கேள்வி கேட்காமல், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத எம்பிக்களை கேள்வி கேட்காமல், சாமானிய மக்களை கொடுமைப்படுத்துவதும் இளைஞர்களை இம்சிப்பதும் தவறு. அனைத்து அன்பான கன்னடர்கள் சார்பிலும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

