நடிகர் பொன்னம்பலம் கிட்னி பாதிக்கப்பட்ட நிலையில் நடக்க முடியாமல் வீல் சேரில் இருந்து வருகிறார். இதுகுறித்து அவர் நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, நான் நன்றாக ஆரோக்கியமாக இருந்தேன். ஆனால் குடும்பத்துக்குள் இருந்த பொறாமை தான் என்னை இப்படி ஆக்கி விட்டது. என் அப்பாவுக்கு 4 மனைவிகள். நான் சினிமாவில் வளர்ந்த போது என் அண்ணனுக்கு 42 வயதாகி விட்டது. அவர் பாம்குரோவ் ஓட்டலில் தான் திருமணம் செய்வேன் என்று உறுதியாக இருந்தார். நான் மறுத்து விட்டேன். அதனால் வருமான வரித்துறை பிரச்சனையில் என்னை அவர் மாட்டி விட்டுவிட்டார்.
ஒருநாள் இரவில் வீட்டுக்கு அருகில் பள்ளம் தோண்டி எனக்கு சூனியம் வைத்தார். எனக்குத் தெரிந்த நபரை மிரட்டி ரசத்தில் குதிரை முடியை பொடி செய்து கலந்து எனக்கு கொடுக்கச் சொல்லி இருக்கிறார். குதிரை முடி குடலில் ஒட்டி 2 வருடம் தொடர்ச்சியாக எனக்கு பேதி ஏற்பட்டது. இதனால் திடமாக இருந்த என் உடல் எடை குறைந்தது. அதற்கு பிறகு பிரஷர் சுகர் வந்தது. இதனால் சூட்டிங் செல்ல முடியாமல் போனது.
என் பிறந்த நாளில் அண்ணன் எனக்கு பீர் வாங்கி கொடுத்து குடிக்குமாறு வற்புறுத்தினார். அதில் என்ன கலந்தார் என்றே தெரியவில்லை. அதுதான் எனக்கு கிட்னி வரை பாதித்துவிட்டது. ஒரு நாள் நடந்த சண்டையில் என்னை கொலை செய்ய முயற்சி செய்ததை அண்ணன் ஒப்புக்கொண்டார். ஒரு நாள் அண்ணனுக்கும் அவரது மனைவிக்கும் நடந்த சண்டையில் என்னை கைகாட்டி அண்ணி அவரை அவமானப்படுத்தியுள்ளார். அந்த கோபத்தில் என்னை அழிக்க அண்ணன் முடிவு செய்திருக்கிறார் என்று நடிகர் பொன்னம்பலம் கூறியிருக்கிறார்.
