தமிழகத்தில் தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பொங்கல் பரிசுத் தொகுப்பை இதுவரை வாங்காதவர்களுக்கு, வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் வழங்கப்பட உள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கப் பணம் ஆகியவை அடங்கிய இந்தத் தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 8-ம் தேதி தொடங்கி வைத்தார். பண்டிகை முடிந்துவிட்ட நிலையில், இதுவரை சுமார் 90 சதவீத அட்டைதாரர்கள் மட்டுமே இப்பரிசைப் பெற்றுள்ளனர்.
மீதமுள்ள 10 சதவீதப் பயனாளிகள் பயன்பெறும் வகையில், விடுப்பட்டவர்களுக்கு திங்கட்கிழமை முதல் ரேஷன் கடைகளில் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை விநியோகம் தொடரும் என்பதால், டோக்கன் வைத்துள்ளவர்கள் அல்லது இதுவரை வாங்காதவர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட நியாய விலை கடைகளுக்குச் சென்று தங்களுக்குரிய பொங்கல் பரிசுத் தொகுப்பைப் பெற்றுக்கொள்ளலாம் என ரேஷன் கடை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
