கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, இன்று நாம் பல வீடியோக்களை பார்க்கிறோம். பைக் மீது திருமாவளவன் சென்ற கார் இடித்து விழுந்தது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதையெல்லாம் மறைத்துவிட்டு இன்று திருமாவளவன் முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். இதை பார்க்கும் போது எப்படி இருக்கிறது என்றால் இவர்களை காப்பாற்றிக்கொள்ள ஆட்சி நடக்கிறது.
ஒரு சாதாரண மனிதன் ரோட்டில் செல்வதை போய் நீங்கள் தட்டுகிறீர்கள், கேட்டால் முறைத்துப் பார்த்தார், நாலு தட்டு தட்டியதாக சொல்கிறார்கள். பிறகு மருத்துவமனையில் போய் நெஞ்சுவலி என்று படுத்திருந்தால் அதையும் கேவலப்படுத்துகிறீர்கள். அதனை கேள்வி கேட்டால் என்னை மிரட்டுகிறீர்கள். அதைத் தாண்டி முதலமைச்சரை சந்தித்து புகார் அளிப்பேன் என்று சொல்கிறீர்கள். அதுவும் திருமாவளவன் பத்திரிகையாளர் சந்திப்பில் என்னுடைய பெயரை இழுத்து நான் தான் இதற்கு பின்னால் இருந்தேன் என்று கூறுகிறார். அந்த டூவீலர் காரர் யார் என்று கூட எனக்குத் தெரியாது.
நான் ஒரு சாமானிய மனிதராக குரல் கொடுக்கிறேன். திருமாவளவன் இதையெல்லாம் விட்டுவிட்டு நாகரிகமான அரசியலுக்கு வரவேண்டும். இது போன்ற வெறுப்பு அரசியல், வன்முறை, திரட்டுவது, ரோட்டில் செல்பவர்களை இடிப்பது, கேள்வி கேட்டால் அடிக்கப் போவது இது என்ன வித்தியாசமான அரசியல்? இவர்கள் தமிழகத்தில் என்ன மாற்றத்தை கொடுக்கப் போகிறார்கள். வன்முறை அரசியலால் யாருக்கு என்ன லாபம் கிடைக்கப் போகுது. அதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம்.
உங்களுக்கு தெரியும் என்னை பொறுத்தவரை ஒரு அடி கொடுத்தால் இரண்டு அடி கொடுப்பேன். மற்றவர்கள் மாதிரி வாங்கிக்கிட்டு போற ஆள் நான் இல்லை. எதற்கும் நான் தயார் தான். வரவேண்டும் என்றால் வாருங்கள். அதனால் இந்த உருட்டல் மிரட்டல் எல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதீர்கள். இதையெல்லாம் பார்த்து காவல்துறை அதிகாரியாக இருந்து அரசியலுக்கு வந்திருக்கிறேன். பல ரவுடிகளை டீல் பண்ணியிருக்கிறேன். இந்த வேலையெல்லாம் என்னிடம் வேண்டாம் என்று அண்ணாமலை பேசியுள்ளார்.
