ஹரியானா மாநிலம் சிர்சாவில், சாலையோர வியாபாரி ஒருவரிடம் வெள்ளரிக்காய் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, அதற்கான 20 ரூபாயைத் தர மறுத்துக் காவலர் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காசு கேட்ட கடைக்காரரைத் தரக்குறைவாகப் பேசியதுடன், ஆத்திரத்தில் அவரைத் தாக்க முயன்ற அந்தப் போலீஸ்காரர், வியாபாரி வைத்திருந்த செல்போனைப் பறிக்கவும் முயற்சி செய்துள்ளார். இந்த அநாகரிகச் செயலை அந்த இடத்திலேயே வீடியோ எடுத்த வியாபாரி, “காசு கேட்டால் அடிக்க வருகிறார்” எனத் தனது குமுறலைப் பதிவு செய்துள்ளார்.
சுற்றி இருந்த பொதுமக்கள் திரண்டு வந்து கேள்வி எழுப்பத் தொடங்கியதும், வேறு வழியின்றி அந்த அதிகாரி பணத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து நழுவிச் சென்றார். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வரும் நிலையில், பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவலரே இப்படிச் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஹரியானா காவல்துறை இன்னும் முறையான விளக்கம் அளிக்கவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இணையவாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
