உத்தரகாண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தைச் சேர்ந்த 38 வயது காவல் அதிகாரி கிரிஷ் பட், ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் சம்பாவத் மாவட்டத்தின் சிறப்பு அதிரடிப்படை பிரிவில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. உயிரிழந்த கிரிஷ் பட்டிற்கு மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர்.
அவர் ஜிம்மில் வழக்கம்போல் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை உடனடியாக மீட்டு, அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவரது இறப்பிற்கான துல்லியமான காரணம் என்ன என்பது குறித்து மருத்துவக் குழுவினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
தற்போது, கிரிஷ் பட் ஜிம்மில் திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. உடற்தகுதியுடன் இருந்த ஒரு இளம் காவல் அதிகாரி ஜிம்மில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம், உடற்பயிற்சி செய்பவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தையும் உருவாக்கியுள்ளது.
