ஒடிசா மாநிலத்தின் கஞ்சம் மாவட்டத்திற்கு உட்பட்ட கல்லிக்கோட் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 14 அன்று ஜே.சி.பி இயந்திரம் ஒன்று களவாடப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், திருடப்பட்ட அந்த கனரக வாகனத்தை மீட்பதற்காக கல்லிக்கோட், ரம்பா, புருஷோத்தம்பூர் மற்றும் கபிசூர்யநகர் ஆகிய நான்கு காவல் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகளும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மர்ம நபர் ஒருவர் அந்த வாகனத்தை ஓட்டிச் செல்வதை காவல்துறையினர் கண்டுபிடித்து அவரைப் பின்தொடர ஆரம்பித்ததால் பெரும் துரத்தல் சம்பவம் அரங்கேறியது.
இயல்பாகவே ஜே.சி.பி இயந்திரங்கள் அதிவேகமாக செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்படாத போதிலும், வாகனத்தை திருடிய நபர் அதனை மிக வேகமாக ஓட்டிச் சென்றுள்ளார். அவரை மடக்கிப் பிடிப்பதற்காக வழியெங்கும் போலீசார் பல தடுப்புகளை அமைத்திருந்தனர். ஆனால், அந்த நபர் காவலர்களின் தடைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டு அசுர வேகத்தில் தப்பிச் சென்றார். சினிமா காட்சிகளை மிஞ்சும் வகையில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்களிடையே பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
பல மணி நேரமாக நீடித்த இந்த சேஸிங், கபிசூர்யநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடியாலி என்ற கிராமத்தில் முடிவுக்கு வந்தது. அங்குள்ள ஒரு விவசாய நிலத்தில் வாகனத்தை அனாதையாக விட்டுவிட்டு அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதையடுத்து, ஜே.சி.பி இயந்திரத்தை மீட்ட காவல்துறையினர், தப்பியோடிய நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் மற்றும் அதனைத் தொடர்ந்த துரத்தலின் போது நடந்தவை குறித்து முழுமையான விசாரணை நடைபெற்று வருவதாக புருஷோத்தம்பூர் துணை காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் நாயக் தெரிவித்துள்ளார்.
