புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை, அம்மன் கோவில் வீதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வெங்கட்ராமன், குளிப்பதற்காகத் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டின் முன்பகுதியில் இருந்த குடிநீர் தொட்டியின் மூடியைத் திறந்துள்ளார். அப்போது, தொட்டிக்குள் விஷத்தன்மை மிகுந்த கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று அமைதியாக நீந்திக் கொண்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியில் அலறியுள்ளார்.
ஈரப்பதம் மற்றும் நீரைத் தேடி பாம்புகள் வருவது வழக்கம் என்றாலும், குடிநீர் தொட்டிக்குள் பாம்பு வந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். தொட்டிக்குள் பாம்பு இருப்பதை அறிந்து, உடனடியாக ஊராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊழியர்கள், சுருக்கு கயிறு பயன்படுத்தி மிக லாவகமாகப் பாம்பைத் தொட்டிக்குள் இருந்து வெளியே எடுத்து, அருகில் இருந்த வனப்பகுதிக்குள் பாதுகாப்பாகக் கொண்டு சென்றுவிட்டனர். குடிநீர் தொட்டிக்குள் விஷப் பாம்பு கண்டறியப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
