தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் பரபரப்பின் உச்சத்திலேயே நகர்ந்து கொண்டிருக்கிறது. தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் காங்கிரஸ் மற்றும் விசிக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு கூட்டணி ஆட்சியை அமைத்தார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். ஆட்சியைத் தக்கவைக்கவும், எதிர்கால அரசியல் நகர்வுகளுக்காகவும் தவெகவில் மாற்றுக்கட்சியினர், குறிப்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடர்ந்து இணைந்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், கூட்டணிக்கு ஆதரவளித்து அமைச்சரவையிலும் பங்கு பெற்றிருக்கும் விசிக தலைவர் திருமாவளவன், “திமுகவுடன் நட்புறவு தொடர்கிறது” என்றும், “தவெக வெற்றி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியல்ல” என்றும் மாற்றி மாற்றிப் பேசி வருவது தவெக தலைவர் விஜயை கடும் கோபத்திற்குள்ளாக்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு எம்எல்ஏக்களுக்கு ஒரு அமைச்சர் பதவி என விசிகவிற்கு ஆட்சியில் உரிய அங்கீகாரம் கொடுத்த நிலையிலும், திருமாவளவன் குழப்பமான மனநிலையோடு அரசைத் தொடர்ந்து விமர்சித்து வருவது கூட்டணி தர்மத்திற்கு அழகல்ல என விஜய் கருதுகிறார். இதனால், விசிகவிற்கு மாற்றாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கும் பாமகவை தவெக கூட்டணிக்குள் கொண்டு வர திரைமறைவில் காய்கள் நகர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் வீட்டிற்கே சென்று விஜய் சந்தித்துப் பேசியதும், அதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகத்தில் நீர்வளத்துறை அமைச்சரை அன்புமணி சந்தித்துப் பேசியதும் இந்த கூட்டணிப் பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. மேலும், செய்தியாளர்களிடம் தவெக அரசை அன்புமணி வெகுவாகப் பாராட்டியது, இக்கூட்டணி உறுதியாகி சௌமியா அன்புமணிக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்ற யூகங்களை பலப்படுத்தியுள்ளது.
மறுபுறம், திமுக கூட்டணியில் இருந்த சில கட்சிகள் தவெக பக்கம் வந்துள்ள நிலையில், கூட்டணியில் உள்ள சிபிஐ, சிபிஎம் போன்ற இடதுசாரிகளும் தவெக அரசை விமர்சித்து வருகின்றன. ஆனால், எம்எல்ஏக்கள் இல்லாத வைகோ விஜயை தொடர்ந்து பாராட்டி வருகிறார். தவெக – பாமக கூட்டணி அமைந்தால், குறைந்தபட்ச எம்எல்ஏக்களின் ஆதரவோடு கூட ஆட்சியை வெற்றிகரமாக நடத்திவிடலாம் என்ற கணக்கில் விஜய் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. பாமகவின் இந்த நெருக்கத்தை உணர்ந்தே திருமாவளவன் பொதுவெளியில் தவெகவிற்கு எதிராகக் காய் நகர்த்தி வருகிறார் என சிறுத்தைகள் கட்சியினரே முணுமுணுக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்த ஒட்டுமொத்த அரசியல் சதுரங்க வேட்டையில், விசிகவைச் சேர்ந்த அமைச்சர் வன்னியரசு பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. விசிக அமைச்சரவையில் பங்கேற்பதே எட்டாக்கனியாக இருந்த சூழலில், முதல்முறையாக எம்எல்ஏ ஆகி அமைச்சர் பதவியையும் பெற்றுத் தமிழகம் முழுவதும் சுறுசுறுப்பாக வலம் வந்து கொண்டிருக்கிறார் வன்னியரசு. திருமாவளவன் விஜயை விமர்சித்தாலும், வன்னியரசு ஒருபோதும் தவெக அரசை விமர்சித்தது இல்லை. தற்போது திருமாவின் இத்தகைய தொடர் முரண்பட்ட செயல்பாடுகளால் தவெக – விசிக கூட்டணி உடைந்து, பாமக உள்ளே வந்தால் தனது அமைச்சர் பதவி பறிபோய்விடுமோ என்ற கடுமையான அச்சத்திலும் கலக்கத்திலும் வன்னியரசு ஆழ்ந்துள்ளதாக அறிவாலய மற்றும் தவெக வட்டாரங்கள் கிசுகிசுக்கின்றன.
