பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவருடைய மகனும் பாமக தலைவருமான அன்புமணி இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அன்புமணியை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்குவதாக அறிவித்த ராமதாஸ், அவர் இனி செயல் தலைவர் மட்டுமே என்றும் கட்சியின் நிறுவனராகவும் தலைவராகவும் நானே செயல்படுவேன் என்றும் அறிவித்துள்ளார். அதே சமயம் ராமதாஸ் மூலம் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகளை அன்புமணி கட்சியில் சேர்ப்பதாக அறிவித்தார். இப்படி இருவரும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டு வருவதால் பாமகவினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்புமணி தரப்பில் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு பாமகவின் தலைவராக அன்புமணிக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு அளித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கிடையில் இன்று பாமகவின் பொதுக்குழு கூட்டம் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமே இல்லாமல் நடந்தது. இது வெறும் டிரெய்லர் தான் என்பதை போல இன்னும் பல சுவாரஸ்ய சம்பவங்களால் சூடுபிடிக்கவுள்ளது அரசியல் களம். அதாவது, கூட்டணிக்கு பெரிய திட்டத்தை வைத்திருக்கிறாராம் பாமக தலைவர் ராமதாஸ். இந்த நிலையில், திமுக கூட்டணியில் பாமகவை இணைக்க முடிவாகி இருப்பதாக கூறப்படுகிறது. இது நடந்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சி என்ன முடிவு எடுக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
