தமிழக அரசியல் களம் தேர்தல் ஜுரத்தில் தகித்துக் கொண்டிருக்கும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் கூட்டணி நிலைப்பாடு குறித்த முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த இரண்டு நாள்களில் கட்சியின் இறுதி முடிவை ராமதாஸ் அறிவிப்பார் என்று பாமக செயல் தலைவர் காந்திமதி தெரிவித்துள்ளார். குறிப்பாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமூக வலைதளங்களில் பரவிய தகவலுக்கு, “No, அப்படி எதுவும் இல்லை” என அவர் ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதன் மூலம் பாமக – தவெக கூட்டணி குறித்த யூகங்கள் அனைத்தும் தவிடுபொடியாகியுள்ளன.
இந்த அதிரடி அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய விவாதங்களைக் கிளப்பியுள்ளது. தவெக தரப்பிலும் கூட்டணி குறித்த ஆர்வம் காட்டப்படாத நிலையில், காந்திமதியின் இந்த வெளிப்படையான மறுப்பு, விஜய் தனது முதல் தேர்தலை தனித்தே சந்திக்கப் போகிறார் என்பதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். பிற கட்சிகளுடனான கூட்டணி கதவுகளும் மெல்ல அடைபடுவதால், ‘தனி ஒருவனாக’ களம் காண தவெக தயாராகி வருவதாகத் தெரிகிறது. அதேநேரம், இன்னும் இரண்டு நாட்களில் பாமக வெளியிடப்போகும் அந்த ‘இறுதி முடிவு’ பழைய கூட்டணியின் தொடர்ச்சியா அல்லது புதிய திருப்பமா என்பதை அறிய அரசியல் வட்டாரங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.
