உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிவம் துபே (24) என்ற மாணவர் பி.டெக்., படித்து வந்தார். கல்லூரி விடுதியில் தங்கி படித்த சிவம் துபே, கடந்த வெள்ளிக்கிழமை விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிவம் துபேவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் சிவம் துபேவின் அறையில் சோதனை செய்த பொழுது, அவர் கடைசியாக எழுதிய கடிதம் கிடைத்தது.
அதில், “இந்த கடிதத்தை நீங்கள் படித்துக் கொண்டிருந்தால், நான் இறந்து விட்டேன் என்று அர்த்தம். தற்கொலை செய்து கொள்வது எனது சொந்த முடிவு. இதை நான் ஒரு வருடமாக திட்டமிட்டு வருகிறேன். எனது உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள். இந்த நாடு சிறந்த நாடாக மாற வேண்டுமென்றால் முதலில் இந்த நாட்டின் கல்வி முறையை மாற்ற வேண்டும். நான் 2 ஆண்டுகளாக வகுப்பறைக்கு செல்லவில்லை. எனது பெற்றோர் செலுத்திய கல்வி கட்டணத்தை, திருப்ப அவர்களிடம் கொடுத்து விடுங்கள்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே, தங்கள் மகன் நீண்ட நாட்களாக வகுப்பறைக்கு வரவில்லை என்பதை கல்லூரி நிர்வாகம் தெரிவிக்கவில்லை என சிவன் துபேவின் பெற்றோர் குற்றம்சாட்சி உள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார், சிவன் துபேவின் உடன்படித்த மாணவர்களுடன் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
