கடல் உணவுகளில் ஒன்றான இறால் பலருக்கும் பிடித்தமானதாக இருந்தாலும், குறிப்பிட்ட சில உடல்நலப் பாதிப்புகள் உள்ளவர்கள் இதனைத் தவிர்ப்பது நல்லது. இறாலில் கொலஸ்ட்ரால் அதிகம் என்பதால், ஏற்கனவே இதய நோய் மற்றும் ரத்தத்தில் கொழுப்புச் சத்து (LDL) அதிகம் உள்ளவர்கள் இதனைச் சாப்பிட்டால் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு உண்டாகும் அபாயம் உள்ளது. அதேபோல், இதில் உள்ள ‘பியூரின்கள்’ உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிப்பதால், மூட்டு வலி மற்றும் கீல்வாதப் பிரச்சினை உள்ளவர்களுக்கு வீக்கமும் கடுமையான வலியும் ஏற்படக்கூடும்.
தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளிகள் இறால் சாப்பிடும்போது கூடுதல் கவனம் தேவை. இதில் உள்ள கனிமங்கள் மற்றும் அயோடின் சத்துக்கள் ஹார்மோன் சமநிலையின்மையையும், சிறுநீரக அழுத்தத்தையும் அதிகரிக்கக்கூடும். சிலருக்கு இறால் சாப்பிட்டவுடன் அரிப்பு, வீக்கம் போன்ற ஒவ்வாமை (Allergy) ஏற்படலாம்; அத்தகைய சூழலில் உடனே மருத்துவரை அணுகுவது அவசியம். ஆரோக்கியமான நபர்களாக இருந்தாலும், இறாலைச் சமைப்பதற்கு முன் அதன் உள்ளே இருக்கும் கருப்பு நரம்பை நீக்கிய பிறகே உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
