“வெறும் கட் அவுட் வச்சே ஜெயிச்சிட்டாங்க.!”.. விஜய்யின் வெற்றியை நக்கல் செய்த பவன் கல்யாண்.. ஆந்திராவில் வெடித்த புதிய சர்ச்சை..!!

By Muthu Mani on வைகாசி 26, 2026

Spread the love


தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் முன்னிலை பெற்று, கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியைப் பிடித்துப் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. கட்சி தொடங்கிய இரண்டே ஆண்டுகளில் தமிழ்நாட்டின் இரு பெரும் மூத்த திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் வெற்றி வாகை சூடியிருப்பது, இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்து, கட்சி தொடங்கிய மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பெருமை எம்.ஜி.ஆர் மற்றும் என்.டி.ஆருக்குப் பிறகு தற்போது விஜய்க்கு மட்டுமே கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் முதலமைச்சரானதைத் தொடர்ந்து, ஆந்திராவின் துணை முதல்வரும் ஜன சேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாணையும் விஜய்யையும் ஒப்பிட்டுப் பலரும் சமூக ஊடகங்களில் பேசத் தொடங்கினர். இதற்குப் பதிலளித்த பவன் கல்யாண், தங்களையும் தங்களது அரசியல் சூழலையும் ஒப்பிட வேண்டாம் என்றும், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் அரசியல் களம் முற்றிலும் வெவ்வேறானவை என்றும் முதலில் தெரிவித்திருந்தார். எனினும், இருவருக்குமான ஒப்பீடுகள் ஓயாத நிலையில், தவெக-வின் இந்த அசுர வளர்ச்சி குறித்து பவன் கல்யாண் அண்மையில் வெளியிட்ட கருத்து புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

   

தனது கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், “தமிழ்நாட்டு அரசியலைப் பார்க்கையில் விஜய் மிக எளிதாக ஜெயித்துவிட்டார் என்பதை நினைத்து எனக்குக் கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது; வெறும் கட் அவுட் மற்றும் ஹோலோகிராம் வைத்தே ஜெயித்துவிட்டார்கள்” என்று நக்கலாகப் பதிவு செய்துள்ளார். மேலும், தான் கடந்த 15 ஆண்டுகளாகத் தெருத்தெருவாக அலைந்து, போராடிப் படிப்படியாகவே ஜன சேனா கட்சியை உருவாக்க வேண்டியிருந்தது என்றும் அவர் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். விஜய்யின் வெற்றியை எகத்தாளம் செய்யும் தொனியில் அமைந்துள்ள பவன் கல்யாணின் இந்தப் பேச்சு, தற்போது தவெக ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பையும் எதிர்ப்புகளையும் உருவாக்கி வருகிறது.