கடந்த ஒரு மாதமாக தமிழ் சினிமாவில் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கும் சில விஷயங்களில் மிக முக்கியமானது பருத்திவீரன் படம் தயாரிப்பு குறித்த விவகாரம். இந்த பிரச்னை குறித்து 17 ஆண்டுகளாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது என்ற தகவல் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் தகவலாக இருந்தது. இதுகுறித்து பேசிய ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீரை மிக தரக்குறைவாக விமர்சித்தது இந்த பிரச்னைக்கு மேலும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போல மாற்றிவிட்டது. ஞானவேல் ராஜாவை கண்டித்து சசிக்குமார், சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், பொன்வண்ணன், கவிஞர் சினேகன், இயக்குநர் பாரதிராஜா, சேரன் போன்ற பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

#image_title
இந்த விவகாரத்தில் ஒரு கட்டத்தில் அமீரை விமர்சித்து பேசிய ஞானவேல் ராஜாவை தவிர்த்து நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி பக்கம் பலரது கோபம் திரும்பியது. அதனால் கடுமையான விமர்சனத்தில் அவர்களும் சிக்கியதால், சிவக்குமார் அறிவுறுத்தலின்படி ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து மட்டுமே அறிக்கை வெளியிட்டார். இந்த பிரச்னை குறித்து, சினிமா விமர்சகர் சுபேர் சில முக்கிய தகவல்களாக சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, இப்போதைய லேட்டஸ்ட் நிலவரப்படி, அமீர் பிரச்னைக்கு காம்பரமைஸ் என்ற முடிவுக்கு சிவக்குமார் பேமிலி வந்துவிட்டது. அமீருக்கு தரவேண்டிய பணத்தை தர அவர்கள் முடிவு செய்துவிட்டனர்.

#image_title
ஏனெனில் தொடர்ந்து இந்த பிரச்னையை வளர்க்க நடிகர் சிவக்குமார் விரும்பவில்லை. இதனால் மகன்களில் சினிமா எதிர்காலம் பாதிக்கும் என கவலைப்படுகிறார். இந்த பிரச்னைக்கு சமரசம் காண விடாமல் ஒரு தயாரிப்பாளர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார். அமீருக்கு ஆதரவாக பேசுபவர்களிடம் சென்று அமீருக்கு ஆதரவு தராதீர்கள் என்று கூறியிருக்கிறார். அதனால் சிலர் அவரை திட்டி அனுப்பியுள்ளனர். அமீர் விவகாரத்தில் டைரக்டர் பாலா சொன்னதால்தான் இந்த முடிவு எட்டப்பட்டதாக ஒரு தகவல் பரவி வருகிறது. அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் அமீருக்கும் பாலாவுக்கும் நீண்டகாலமாக தொடர்பே இல்லை. எனினும் அவர் சொன்னாலும் சிவக்குமார் குடும்பம் அவரது பேச்சுக்கு மதிப்பளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே வெகுவிரைவில் இந்த பருத்திவீரன் பஞ்சாயத்து முடிவுக்கு வந்துவிடும் என்று சுபேர் அதில் கூறியிருக்கிறார்.
