மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், 12 வயது சிறுவனை அவனது பெற்றோரே வீட்டின் கூரையில் சங்கிலியால் பிணைத்து வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அஜ்னி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் அந்தப் பெற்றோர், வேலைக்குச் செல்லும்போது தினமும் தங்கள் மகனை வீட்டின் மொட்டை மாடியில் உள்ள ஒரு கம்பியில் சங்கிலியால் கட்டிப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். சிறுவன் பிடிவாதமாகவும், கீழ்ப்படியாமலும் நடப்பதாகக் கூறி பெற்றோர் செய்த இந்த மனிதாபிமானமற்ற செயலால், அந்தச் சிறுவனின் கைகளில் ஆழமான தழும்புகள் ஏற்பட்டுள்ளன.
இந்தக் கொடுமை குறித்துத் தகவல் அறிந்ததும், குழந்தைகள் உதவி மையம் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் பாதுகாப்புக் குழுவினர் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். காவல்துறையினரின் உதவியுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற குழுவினர், சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த சிறுவனைப் பாதுகாப்பாக மீட்டனர்.
