தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிகழ்வாக, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்.27) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஓபிஎஸ் உடன் அவரது மகனும் முன்னாள் எம்பியுமான ஓ.பி.ரவீந்திரநாத் மற்றும் அவரது தீவிர ஆதரவாளரான அய்யப்பன் எம்.எல்.ஏ ஆகியோரும் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மூவரும் திமுகவின் உறுப்பினர் படிவத்தை முறைப்படி பூர்த்தி செய்து வழங்கி, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக உடன்பிறப்புகளாக மாறினர்.
அதிமுகவில் நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் மற்றும் சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, ஓபிஎஸ் எடுத்துள்ள இந்த முடிவு தமிழக அரசியல் களத்தில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. மூன்று முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஒரு மூத்த தலைவர், தனது வாரிசு மற்றும் முக்கிய ஆதரவாளர்களுடன் ஆளுங்கட்சியில் இணைந்திருப்பது தென் மாவட்ட அரசியல் சமன்பாடுகளை மாற்றியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணைப்பிற்குப் பிறகு, வரும் சட்டமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் அணியினருக்கு திமுகவில் முக்கியப் பொறுப்புகள் அல்லது தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
