தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதேசமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக பல்வேறு சிக்கல்களை தொடர்ந்து சந்தித்து வருகிறது. பாஜகவுடன் இ பி எஸ் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக கட்சி நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.
அதன் வெளிப்பாடாக சமீபத்தில் செங்கோட்டையன் பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒருங்கிணைக்க இபிஎஸ்-க்கு கெடு விதித்திருந்தார். ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஒன்றிணைய உள்ளதாக ஒரு தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் இருக்க வேண்டுமென அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். இபிஸ்க்கு எதிராக கழக குரல் எழுப்பிய செங்கோட்டையன், நேற்று அமித்ஷாவை சந்தித்து அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து பேசி இருந்த நிலையில் அண்ணாமலையின் இந்த அழைப்பு அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை அண்ணாமலை சரி செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளார். இது இபிஎஸுக்கும் பேரதிர்ச்சியை தந்துள்ளது.
