அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது திமுகவுடன் இணக்கமான போக்கை கடைபிடித்து வரும் நிலையில், அவரது தீவிர ஆதரவாளர்கள் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுகவில் இணைந்து வருவது ஓபிஎஸ் தரப்பிற்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
குறிப்பாக, ஓபிஎஸ்-ஸின் வலதுகரமாகத் திகழ்ந்த முன்னாள் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ-வான வெ. ஏழுமலை அதிமுகவில் இணைந்ததைத் தொடர்ந்து, தற்போதைய எம்.பி. பாலாஜி, முன்னாள் அமைச்சர் டி.ராமசாமியின் மகன் டி.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுடன் ஈபிஎஸ்-ஐ சந்தித்து கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். சொந்த கோட்டையான தேனியிலேயே செல்வாக்கு சரிந்து வருவதாலும், முக்கிய தளபதிகள் எடப்பாடி பழனிசாமி பக்கம் அணிவகுப்பதாலும் ஓபிஎஸ் அரசியல் ரீதியாக கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
