திருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (35). தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தனது வீட்டில் சிறிய விநாயகர் சிலையை வைத்து சிறப்பு வழிபாடு செய்துள்ளார். வழிபாடு முடிந்ததும் மாலையில், அந்தச் சிலையை எண்ணூர் பாரதியார் நகர் அருகே உள்ள கடலில் கரைப்பதற்காகத் தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இருப்பினும், வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது மனைவி காமாட்சி, கமலக்கண்ணனின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டுள்ளார். அழைப்பை அவர் ஏற்காததால் பதற்றமடைந்த காமாட்சி, பாரதியார் நகர் கடற்கரைக்கு விரைந்து சென்று தேடியுள்ளார். அங்கு கமலக்கண்ணன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கரையில் நிறுத்தப்பட்டிருப்பதையும், அதிலேயே அவரது செல்போன் இருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து எண்ணூர் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கடலில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதற்கிடையே, உடலைக் விரைவாக மீட்டுத் தருமாறு திருவொற்றியூர் எம்.எல்.ஏ. செந்தில்குமாரிடம் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்த எம்.எல்.ஏ., தீயணைப்புத் துறையினரையும் உள்ளூர் மீனவர்களையும் மீட்புப் பணியை முடுக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற தீவிரத் தேடுதலில், கரைக்கு அருகே சுமார் 30 மீட்டர் தொலைவில் கமலக்கண்ணனின் சடலம் நேற்று காலை மீட்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
