ஒடிசா மாநிலத்தில் திருமணத்திற்கு சில நாட்களே இருந்த நிலையில், இளம்பெண் ஒருவர் ஒருதலைக் காதலனால் நடுரோட்டில் குத்திப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுந்தர்கட் பகுதியைச் சேர்ந்த ஷிகா சப்னா என்ற அந்தப் பெண், பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஜனவரி 12-ம் தேதி அவருக்குத் திருமணம் நடக்கவிருந்த நிலையில், கடந்த 10-ம் தேதி திருமணப் பொருட்கள் வாங்க கடைக்குச் சென்றபோது இக்கோரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஷிகா சப்னா வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர் அவரைத் தேடி வந்தனர். அப்போது, ஷிகா கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதாகக் காவல்துறையினர் தகவல் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசாரின் விசாரணையில், கார்கட் பகுதியைச் சேர்ந்த முகேஷ் என்ற இளைஞர் இந்தக் கொலையைச் செய்ததை ஒப்புக்கொண்டார். கல்லூரியில் படிக்கும் போதிலிருந்தே முகேஷ் ஷிகாவை ஒருதலைப்பட்சமாகக் காதலித்து வந்ததும், அவரது காதலை ஷிகா தொடர்ந்து நிராகரித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
தனது காதலை ஏற்காதது மட்டுமின்றி, வேறு ஒருவருடன் திருமணத்திற்குச் சம்மதித்ததால் ஆத்திரமடைந்த முகேஷ், ஷிகாவை வழிமறித்துத் தன்னைக் காதலிக்குமாறு மீண்டும் வற்புறுத்தியுள்ளார். அப்போதும் ஷிகா மறுப்புத் தெரிவிக்கவே, தன்னிடம் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைத் தாக்கித் தப்பியோடியுள்ளார். தற்போது முகேஷைக் கைது செய்துள்ள போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒருதலைக் காதலால் ஒரு பெண்ணின் உயிரும், ஒரு குடும்பத்தின் கனவும் சிதைந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
