“ஐயோ.. காப்பாத்துங்க..!” போனில் அலறிய மனைவி.. அடுத்த நொடி கணவன் செய்த அதிரடி.. மதுரையில் பகீர்…!!

By Gayathri on ஆவணி 7, 2026

Spread the love

மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள அ.புதுப்பட்டியில், வெளிநாட்டில் வேலை பார்க்கும் இளங்கோவன் என்பவரின் மனைவி கலைச்செல்வி, குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் தனது கணவருடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்த நேரத்தைப் பயன்படுத்தி, அதே பகுதியைச் சேர்ந்த பரசுராம் மற்றும் அவனது நண்பரான ரஞ்சித் ஆகியோர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். தனியாக இருந்த கலைச்செல்வியைக் கடுமையாகத் தாக்கிய அவர்கள், அவரது கழுத்தை சேலையால் நெரித்து அவர் அணிந்திருந்த நகைகளைக் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.

அச்சமயம் கலைச்செல்வி எழுப்பிய அலறல் சத்தத்தை செல்போன் வழியாகக் கேட்ட அவரது கணவர், ஏதோ ஆபத்து நேர்ந்துள்ளதை உணர்ந்து உடனடியாக உள்ளூரில் உள்ள தனது நண்பர்களைத் தொடர்புகொண்டு உதவிக்கு அழைத்துள்ளார். விரைந்து வந்த அவரது நண்பர்களும் அக்கம் பக்கத்தினரும், உயிருக்கு போராடிய கலைச்செல்வியை பத்திரமாக மீட்டதோடு, தாக்குதலில் ஈடுபட்ட இருவரையும் வீட்டின் உள்ளே தள்ளி கதவை வெளிப்புறமாகப் பூட்டி சிறைவைத்தனர். இதற்கிடையே வீட்டின் வெளியே கூட்டாளிகளுக்காகக் காவல் நின்றுகொண்டிருந்த தினேஷ் என்ற மற்றொரு நபர், மக்கள் திரண்டு வருவதைக் கண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

   

இதனைத் தொடர்ந்து, மேலூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருந்த இருவரையும் கைது செய்தனர். பலத்த காயமடைந்த கலைச்செல்வி உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேவநாதன் நேரில் வந்து விசாரணை நடத்தியதுடன், தப்பியோடிய தினேஷை விரைந்து பிடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பட்டப்பகலில் வீடுபுகுந்து நடந்த இந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.