அதிமுக, திமுக முடிவில் மாற்றம்… தியாகிகளுக்கு கொடுத்த மாஸ் கவுரவம்… தமிழ்நாடு தினத்தில் முதலமைச்சர் விஜய் எடுத்த அதிரடி முடிவு…!

By Visaka on ஆடி 18, 2026

Spread the love

தமிழ்நாட்டின் முக்கிய வரலாற்று தினங்களான ஜூலை 18 மற்றும் நவம்பர் 1 ஆகிய இரு தேதிகளையும் தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாகக் கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 1967-ஆம் ஆண்டு ஜூலை 18 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டமன்றத்தில் சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு” எனப் பெயர் சூட்டும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முக்கிய தினத்தில், தமிழரின் தொன்மை, பண்பாடு மற்றும் மொழியுணர்வைப் போற்றி ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் முதலமைச்சர் தனது நெஞ்சார்ந்த ‘தமிழ்நாடு நாள்’ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 1956-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினத்தை அடிப்படையாகக் கொண்டு, முந்தைய அதிமுக அரசு நவம்பர் 1-ஐ தமிழ்நாடு நாளாக அறிவித்தது. ஆனால், 2021-ல் பொறுப்பேற்ற திமுக அரசு, அண்ணா தீர்மானம் நிறைவேற்றிய ஜூலை 18-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக மாற்றியமைத்தது. திமுகவின் இந்த முடிவிற்குப் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, இரு தரப்பு நியாயங்களையும் ஏற்றுக்கொண்டு இரண்டு தினங்களையும் அரசு விழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளது.

   

இது தொடர்பாக முதலமைச்சர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில், மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் தேதியையும், தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் தேதியையும் இந்த அரசு சிறப்பாகக் கொண்டாடும் என உறுதியளித்துள்ளார். மேலும், சமத்துவமும் சமூகநீதியும் தழைத்தோங்கும் தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்ற இந்நாளில் உறுதியேற்போம் என்று குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு உருவாகப் பாடுபட்ட தியாக சீலர்களை நினைவுகூர்ந்து தனது மரியாதையைச் செலுத்தியுள்ளார்.