CINEMA
தம்பி நாம சம்பாதிக்குற காசு ரசிகன் கொடுத்தது.. அதுல கொஞ்சம் அவனுக்கே போகட்டும்.. MGR-க்கு அட்வைஸ் செய்த நடிகர்..
தமிழ் சினிமாவில் தன்னுடைய வள்ளல் குணத்துக்காக பெயர் பெற்றவர் நடிகர் எம் ஜி ஆர். ஆனால் அப்படி எம் ஜி ஆருக்கே அந்த குணம் வருவதற்குக் காரணமாக இருந்தவர் கலைவாணர் என் எஸ் கே. நாடக மற்றும் சினிமா உலகில் தனக்கு சீனியரான என் எஸ் கே மேல் அளவு கடந்த பிரியம் வைத்திருந்தார் எம் ஜி ஆர்.
தமிழ் சினிமாவில் முதல் முதலில் பகுத்தறிவு மற்றும் முற்போக்கான கருத்துகளை தன்னுடைய நகைச்சுவை காட்சிகள் மூலம் பரப்பியவர் என் எஸ் கிருஷ்ணன். தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர், சிவாஜி உள்ளிட்டோர்களே மிகவும் மரியாதையாக நடத்திய நபர்களில் ஒருவர் என் எஸ் கே. நாடக மேடையில் இருந்து திரைப்படத்துக்குள் நுழைந்த அவர் அங்கும் தன்னுடைய நடிப்பால் புகழ் பெற்றார்.
தான் நடித்து சம்பாதித்த செல்வம் முழுவதையும் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் செலவிட்டுள்ளார். தனது வாரிசுகளுக்குக் கூட எந்த சொத்தையும் அவர் சேர்த்துவைக்கவில்லை. நான் சம்பாதித்ததை நான் செலவு செய்கிறேன். அவர்கள் சம்பாதித்து அவர்கள் விருப்பம் போல வாழட்டும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய செலவினங்கள் குறித்து கோபித்துக்கொண்ட அப்போது இளம் நடிகராக இருந்த எம் ஜி ஆருக்கு என் எஸ் கே ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில் ” ஒன்றரை அணா டிக்கெட் எடுத்து , தரையிலே அமர்ந்து கொண்டு , நம்முடைய நடிப்பைப் பார்த்து , கைதட்டி மகிழ்கிற ரசிகர்கள் தான் நாம் தேடி வைக்கும் நிரந்தர செல்வம்.
அந்த ரசிகன் கொடுக்கிற ஒன்றரை அணாவில் ஓரளவாவது மீண்டும் அவர்களுக்கே சென்று சேரும்படி, நல்ல காரியங்களுக்கு உதவுவதே நல்ல கலைஞனுக்கு இலக்கணம் ” எனக் கூறினாராம். பின்னர் தான் சம்பாதித்து செல்வ செழிப்பாக இருந்த போது எம் ஜி ஆர் தான் செய்த உதவிகளுக்கு என் எஸ் கே வின் இந்த அறிவுரையும் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.