‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி, தொடர்ந்து பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்ளிட்ட பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். கடந்த சில ஆண்டுகளாக புதுப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்த இவர், தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து எழுந்த வதந்திகளையும், துபாயில் வீடு வாங்கியதாக வந்த குற்றச்சாட்டுகளையும் மறுத்திருந்தார். இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டோடு சினிமாவை விட்டு முற்றிலுமாக விலக தான் முடிவெடுத்திருந்ததாக அவர் தற்போது உடைத்துப் பேசியுள்ளார்.
மூத்த இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங்கீதம்’ திரைப்படத்தில் நிவேதா பெத்துராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவரே இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். சில நேரங்களில் வாழ்க்கை தவறான பாதைகளில் கூட்டிச் சென்றாலும், இந்தத் திரைப்படம் தன்னை மீண்டும் சினிமாவிற்குள் கொண்டு வந்து சேர்த்துள்ளதாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு மறுவாழ்வு கொடுத்த தயாரிப்பாளர் நாக் அஸ்வினுக்கு இந்த மேடையில் அவர் தனது நன்றியைத் தெரிவித்தார். நாக் அஸ்வின் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் தான் இமயமலையில் தியானம் செய்து கொண்டு, வேறு ஒரு வாழ்க்கையை வாழத் தொடங்கியிருப்பேன் என்று கூறிய நிவேதா பெத்துராஜ், ‘சிங்கீதம்’ படம் மூலமாக மீண்டும் சினிமாவிற்குத் திரும்பி வந்துள்ளதாகத் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
