பாரதிய ஜனதா கட்சிக்கும் , எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையே நெருக்கமான உறவு இருப்பதாக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை என்று மிக உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது பேச்சில், திமுகவின் மறைமுகமாகவே பாஜக செயல்பட்டு வருவதாகவும், பின்னாடி இருந்து திமுகவை இயக்குவதே பாஜகதான் என்றும் சாடியுள்ளார். மேலும், பல்வேறு நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறை அனுமதி கோரியும் இதுவரை எந்தக் கோப்பிலும் கையெழுத்தாகவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் கோப்புக்கு ஆளுநர் ஏன் இதுவரை ஒப்புதல் அளிக்காமல் தேக்கி வைத்துள்ளார் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார். கவர்னரும், திமுகவும், பாஜகவும் இணக்கமாக ஒன்றாகவே இருக்கிறார்கள் என்று குற்றம் சாட்டிய அமைச்சர் நிர்மல் குமார், செந்தில்பாலாஜி மீதான கோப்பில் ஆளுநர் கையெழுத்திடாதது ஏன் என்பதற்கு திமுகதான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
