வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற தகவல் தொடர்பு செயலிகளைப் பயன்படுத்துவதில் மார்ச் 1 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இந்தியத் தொலைத்தொடர்புத் துறை கொண்டுவந்துள்ள ‘சிம் பைண்டிங்’ (SIM Binding) எனும் இந்த புதிய விதியின்படி, ஒரு பயனர் தனது வாட்ஸ்அப் கணக்கை வைத்திருக்கும் மொபைல் போனில், அந்த குறிப்பிட்ட சிம் கார்டு கண்டிப்பாக இருக்க வேண்டும். இதன் மூலம், இனி சிம் கார்டு இல்லாத சாதனங்களில் வாட்ஸ்அப் பயன்படுத்துவது சிக்கலாகலாம்.
தற்போதைய நடைமுறைப்படி, ஒருமுறை வாட்ஸ்அப் கணக்கை ஒரு போனில் பதிவு செய்துவிட்டால், அதன் பிறகு அந்த சிம் கார்டை நீக்கினாலும் அல்லது வேறு போனில் போட்டாலும், வைஃபை (Wi-Fi) உதவியுடன் பழைய போனில் வாட்ஸ்அப் தொடர்ந்து இயங்கும். ஆனால், புதிய மாற்றத்தின் கீழ், செயலிகள் அவ்வப்போது அந்த போனில் சிம் கார்டு இருக்கிறதா என்பதைத் தானாகவே சரிபார்க்கும். சிம் கார்டு அகற்றப்பட்டாலோ அல்லது செயலிழந்தாலோ, மீண்டும் அந்த சிம் கார்டைச் செருகி அங்கீகரிக்கும் வரை வாட்ஸ்அப் கணக்கு தற்காலிகமாக முடக்கப்படும்.
இணையப் பாதுகாப்பை மேம்படுத்தவும், போலி எண்கள் மூலம் நடக்கும் சைபர் குற்றங்களைத் தடுக்கவும் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிம் கார்டு மற்றும் செயலி ஆகியவற்றை நேரடியாக இணைப்பதன் மூலம், குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண முடியும் என்றும், தவறான வழிகளில் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுவதை இது பெருமளவு குறைக்கும் என்றும் அதிகாரிகள் நம்புகின்றனர். பொதுமக்கள் தங்களது முக்கியத் தொடர்புச் சாதனமான வாட்ஸ்அப்பை தடையின்றி பயன்படுத்த, சிம் கார்டு செயல்பாட்டில் இருப்பதை உறுதி செய்வது அவசியமாகிறது.
