உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது. இதனால் கூட்ட நெரிசல் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றன. இதனிடையே திருமலை திருப்பதி ஏழுமலையான் பக்தர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலமாக வழங்கப்படும் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை பெறுவதில் ஜனவரி 9 நாளை முதல் புதிய நடைமுறை அமலுக்கு வருகின்றது.
இதுவரை திருமலையில் உள்ள கோகுலம் விடுதி அருகே வழங்கப்பட்டு வந்த 800 ஆஃப்லைன் டிக்கெட்டுகள் இனி முழுமையாக ஆன்லைன் முறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் நின்று சிரமப்படுவதை தவிர்ப்பதற்காக தேவஸ்தானம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. சோதனை முயற்சியாக ஒரு மாத காலம் இந்த திட்டம் அமலில் இருக்கும் எனவும் இருந்தாலும் திருப்பதி விமான நிலைய கவுண்டரில் மட்டும் வழக்கம் போல 200 நேரடி டிக்கெட்டுகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் முன்பதிவு தினமும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் நடைபெறும். முன்பதிவு செய்தவர்கள் அன்றைய தினம் மாலை 4 மணி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
