அன்று தெர்மாகோல்.. இன்று கொசுவலை…!! புதிய திட்டத்தை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்… இது புதுசா இருக்கே…!!

By Devi Ramu on தை 22, 2026

Spread the love

சென்னையில் பருவமழைக்கு பிறகு கொசுக்களின் தொல்லை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் இரவு நேரங்களில் தூக்கமின்றி தவித்து வருகின்றனர். மாநகராட்சி சார்பில் அடிக்கப்படும் கொசுமருந்து புகை போதிய பலன் அளிக்கவில்லை என்றும், இதனால் காய்ச்சல் பாதிப்புகள் கூடிவருவதாகவும் மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி தற்போது மழைநீர் வடிகால்வாய்களின் ஓட்டைகளை கொசுவலை கொண்டு மூடும் புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது. திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்டமாகத் தொடங்கியுள்ள இப்பணிகள் மூலம், வடிகாலுக்குள் இருக்கும் கொசுக்கள் வெளியேறுவதைத் தடுக்க முடியும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

   

இருப்பினும், மாநகராட்சியின் இந்த வினோத நடவடிக்கை சமூக வலைதளங்களில் கடும் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறது. வைகை அணையில் நீர் ஆவியாவதைத் தடுக்க தெர்மாகோல் மிதக்கவிட்ட பழைய சம்பவத்துடன் ஒப்பிட்டு, பலரும் நகைச்சுவையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

   

நடிகர் வடிவேலுவின் கொசுவலை காமெடியைப் பதிவிட்டு ‘சிட்டி விஞ்ஞானி’ என அதிகாரிகளை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இத்தகைய விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், எந்த முறையிலாவது கொசுத்தொல்லைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைத்தால் போதும் என்பதே சென்னைவாசிகளின் ஒரே கோரிக்கையாக உள்ளது.