தமிழ் சினிமாவில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்தவர் தான் நடிகர் பாலா சிங். 2019 ஆம் ஆண்டிலேயே நம்மை விட்டு மறைந்த ஒரு சிறந்த கலைஞர் தான் பாலாசிங். மலமுகலிலே தெய்வம் என்ற மலையாளத் திரைப்படம் மூலமாகத்தான் இவர் முதன்முதலாக சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு கவிதை பாட நேரமில்லை என்ற படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றினார்.

இந்த இரண்டு அனுபவங்களுமே அவருக்கு மிகப்பெரிய திருப்தியை தரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதன் காரணமாக சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்த பாலாசிங் தனது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு புறப்பட்டார். தனது உறவுக்கார பெண்ணை மணமுடித்து அங்கேயே இருந்த பாலா சிங்கை மீண்டும் சினிமாவிற்கு அழைத்து வந்தது அவருடைய நண்பர் நடிகர் நாசர் தான்.

அவதாரம் திரைப்படத்தில் பாசி கதாபாத்திரத்தை எழுதி முடித்த பிறகு உடனே நினைவுக்கு வந்தது பாலா சிங் தான். உடனே காரை எடுத்துக் கொண்டு நாசர் நாகர்கோவிலுக்கு புறப்பட்டார். அங்கு அவரை சந்தித்து பேசி அதன் பிறகு அவதாரம் திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தாலும் பொருளாதார ரீதியாக அவருடைய வாழ்க்கை நிலை உயரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தான் இறப்பதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாக தன் மகளின் திருமணத்தை நாகர்கோவிலில் மிகச் சிறப்பாக பாலாசிங் நடத்தி முடித்தார். அவர் நடித்த கடைசி திரைப்படம் நீர்திரை என சொல்லப்படுகிறது.
