விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயன் மற்றும் திருநங்கை வைஷு இடையிலான நீண்டகாலப் பிரச்சனை தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முன்னதாகத் தன் மீது வைஷு சுமத்திய காதலித்து ஏமாற்றிய புகாரை அவர் வாபஸ் பெற்றிருந்த நிலையில், தற்போது மீண்டும் அவர் முன்வைக்கும் தொடர் குற்றச்சாட்டுகளால் நாஞ்சில் விஜயன் தனது மனைவியுடன் இணைந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த நாஞ்சில் விஜயன், தான் பணம் வாங்கியதாகவோ அல்லது தவறாக நடந்துகொண்டதாகவோ வைஷு கூறுவதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், வைஷுவின் இச்செயல் மற்ற திருநங்கைகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகவும் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
நாஞ்சில் விஜயனின் மனைவி பேசுகையில், வைஷு தினமும் நள்ளிரவில் மதுபோதையில் தங்களுக்குத் தொலைபேசி வாயிலாக மிரட்டல் விடுப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், தங்கள் தனிப்பட்ட உடல்நிலை குறித்தும், தங்களின் குழந்தையைச் சம்பந்தப்படுத்தியும் அவர் பொதுவெளியில் பேசி வருவது தங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகக் கண்ணீருடன் முறையிட்டுள்ளார். தான் அன்பாகப் பழகியதை வைஷு தவறாக புரிந்துகொண்டு, தற்போது தங்களின் குடும்ப அமைதியைக் குலைப்பதாக நாஞ்சில் விஜயன் தரப்பு முன்வைத்துள்ள இந்தப் புதிய புகார், இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
