தமிழக அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அதில் முக்கியமானது தான் சுகாதாரத்துறை சார்ந்த திட்டங்களாகும். அதன்படி மக்களை தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48, வருமுன் காப்போம், இதயம் காப்போம், நடப்போம் நலம் பெறுவோம், மக்களை தேடி மருத்துவ ஆய்வாக திட்டம், தொழிலாளர்களை தேடி மருத்துவத் திட்டம், புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகள் என ஏராளமான சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் தமிழக முதல்வரால் நாளை ஆகஸ்ட் 2ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
மக்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய உடல் நலனை பாதுகாத்திடும் வகையில் மருத்துவமனைகளில் முழு உடல் பரிசோதனை அடிக்கடி செய்வது அவசியமாகும். நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டம் மக்களைத் தேடி முழு உடல் பரிசோதனை திட்டம் என்ற வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது என்பது தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்றால் 15000 வரை செலவாகும். அரசு மருத்துவமனைகளிலும் நான்காயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இப்படியான நிலையில் மக்களை தேடிச் சென்று முழு உடல் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டத்திற்கு நலம் காக்கும் ஸ்டாலின் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தத் திட்டத்தில் மக்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் முழு உடலையும் பரிசோதனை செய்து கொள்ள முடியும்.
புற்றுநோய் பாதிப்புகளை கண்டறிவதற்கான பணிகளும் இந்த முகாம்களில் நடைபெறும். தமிழ்நாட்டில் 388 ஒன்றியங்களில் ஒவ்வொரு வட்டத்திற்கும் மூன்று என்ற வகையில் 1164 முகாம்கள் நடத்தப்பட உள்ளது. ஓராண்டு காலத்திற்கு பொதுமக்கள் இந்த திட்டம் மூலம் பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த முகாம்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதற்கான கோப்புகள் மக்களிடமே வழங்கப்படும். இதன் மூலம் பொதுமக்கள் எதிர்காலத்தில் மேல் சிகிச்சை செய்து கொள்ளும் வகையில் இந்த ஆவணங்கள் பயன்படும். இந்த முகம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மட்டுமே காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
