“ஒரே நிமிடத்தில் எல்லாம் முடிந்தது!”…. பைக் ரேஸ் மோகத்தால் பறிபோன 12-ம் வகுப்பு மாணவனின் உயிர்…. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்…!

By Nanthini on பங்குனி 16, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகர் பகுதியில், ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற அதிவேக பைக் பந்தயம் பெரும் சோகத்தில் முடிந்தது. 12-ம் வகுப்பு மாணவனான 17 வயது நைதிக் குமார் (Naitik Kumar), தனது ராயல் என்ஃபீல்டு பைக்கில் சக நண்பர்களுடன் சாலையில் அதிவேகமாகச் சென்றுகொண்டிருந்தார். ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா அருகே இவர்கள் பந்தயத்தில் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக முன்னால் வந்த ஆக்டிவா ஸ்கூட்டர் மீது பைக் மோதியது.

இந்த விபத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருந்ததால், நைதிக் குமார் நிலைதடுமாறி சாலையோரத் தடுப்பில் (Divider) பலமாக மோதினார். தலையில் பலத்த காயம் அடைந்த அவரை, உடன் வந்த நண்பர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். உயிரிழந்த மாணவரின் தந்தை மின்சாரத் துறையில் பொறியாளராகப் பணியாற்றி வருகிறார்.

   

விபத்தின் போது நைதிக் குமாருடன் சென்ற மற்ற இரண்டு நண்பர்களான ஆதித்யா மற்றும் கிருஷ்ணா ஆகியோரும் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சை முடிந்து தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்த முழு விபத்து சம்பவமும், பின்னால் வந்த நண்பரின் பைக்கில் பொருத்தப்பட்டிருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. “ஒரே நிமிடத்தில் எல்லாம் முடிந்துவிட்டது” என்ற உருக்கமான வரிகளுடன் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

   

இளைஞர்களிடையே அதிகரித்து வரும் இந்த ஆபத்தான பைக் ரேஸ் மற்றும் ஸ்டண்ட் கலாச்சாரம் குறித்து அப்பகுதி மக்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர். முறையான பாதுகாப்பு கவசங்கள் இன்றி, பொதுச் சாலைகளில் அதிவேகமாகச் செல்வது உயிரைப் பறிக்கும் ஆபத்து என்பதை உணர்த்தும் விதமாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளது. காவல்துறை இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.