தமிழ் சினிமாவில் தன்னுடைய வித்தியாசமான உடல்மொழி மற்றும் நகைச்சுவை தெறிக்கும் வசனங்கள் மூலமாகக் கலக்கியவர் நாகேஷ். 20 ஆண்டுகளுக்கு மேலாக இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார். அவரை தமிழ் சினிமாவின் சார்லி சாப்ளின் என்றும் சொல்வர். கவுண்டமணி வருகைக்குப் பிறகும் பல படங்களில் நகைச்சுவை, வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
அவர் தன்னுடைய மார்க்கெட்டின் உச்சத்தில் இருந்த போது கிட்டத்தட்ட அனைத்து தமிழ் படங்களிலும் நடித்தார். ஒரு நாளைக்கு ஷிஃப்ட் கணக்கில் ஐந்து படங்களில் கூட நடித்துள்ளார். இதனால் எந்த பட ஷூட்டிங்குக்கும் அவரால் சொன்ன நேரத்தில் செல்ல முடியாதாம். அதனால் அவர் வர தாமதமானால் எம் ஜி ஆர், சிவாஜி கூட அவருக்காக காத்திருக்க வேண்டிய சூழல் உருவானதாம்.
நகைச்சுவை நடிகர் என்பதால் நாகேஷ் வெறும் காமெடியில் மட்டுமே கலக்குவார் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர் சர்வர் சுந்தரம் மற்றும் எதிர்நீச்சல் ஆகிய படங்களில் எமோஷனல் வேடங்களில் கலக்கி இருப்பார். இது சம்மந்தமாக நாகேஷ் தனக்கும் இயக்குனர் ஏசி திருலோகசந்தருக்கும் நடந்த வாக்குவாதம் பற்றி பேசியுள்ளார்.
அதில் “ஒரு படத்தில் என் அக்கா கதாபாத்திரத்துக்கு கல்யாணம் நின்றுவிடும் எமோஷனல் காட்சி. அப்போது நீ காமெடியன்தானே உனக்கு இந்த சீனில் பெரிதாக வேலையில்லை என்று திருலோகசந்தர் சொல்லிவிட்டார். ஆனால் நான் ‘என்ன சார்… என் அக்கா கல்யாணம் நின்னு போச்சு. ஒரு தம்பியா நான் என் எமோஷனக் காட்ட வேணாமா?’ எனக் கேட்டு ஆக்ஷன் சொன்னதும் “எனக்குத் தோன்றிய வார்த்தைகளைப் பேசி எமோஷனாக நடித்துவிட்டேன்”. அதைப் பார்த்த ஷூட்டிங்கில் இருந்த லைட்பாய் முதல் அனைவரும் கைதட்டி ரசித்தனர். அதனால் ஒரு நடிகன் என்றால் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் நடித்து விடவேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
