மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகன் பார்த்திபன் (19). தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரும், அருகிலுள்ள சாத்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தனின் மகள் திவ்யதர்ஷினியும் (16) கடந்த சில காலமாக காதலித்து வந்துள்ளனர். 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரிக்குச் செல்லவிருந்த மாணவி திவ்யதர்ஷினியின் வீட்டில் இவர்களது காதலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இரு குடும்பத்தாருக்கும் இடையே இந்த விவகாரம் தொடர்பாகப் பெரும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சாதியப் பாகுபாடு மற்றும் குடும்பப் பிரச்சனை எல்லை மீறியதைத் தொடர்ந்து, பார்த்திபனின் குடும்பத்தினர் பெண் வீட்டார் மீது பொறையார் காவல் நிலையத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நேற்று புகார் அளித்துள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், நள்ளிரவு சுமார் 3 மணி அளவில் சாத்தங்குடி பகுதியில் உள்ள குமரவேல் என்பவருக்குச் சொந்தமான ஒரு கீற்றுக் கொட்டகையில், பார்த்திபனும் திவ்யதர்ஷினியும் தனித்தனியாகத் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஏடிஎஸ்பி சுரேஷ், டிஎஸ்பி சரவணன் ஆகியோர் தலைமையில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து வந்தனர். உயிரிழந்தவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அப்பகுதியில் சட்ட ஒழுங்குப் பிரச்சனை ஏற்படாமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அங்கு இரு வீட்டாரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களைச் சமாதானப்படுத்தி, சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில், ஆத்திரமடைந்த எதிர்தரப்பினர் சிறுமியின் உறவினர்களின் வீடுகளையும், வாகனங்களையும் அடித்து நொறுக்கிச் சேதப்படுத்தியதால் அங்கு பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
பெண் வீட்டாரே தங்களது மகனை ஆணவக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாகப் பார்த்திபனின் குடும்பத்தினர் காவல்துறையினரிடம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். குடும்பத்தினர் எதிர்த்ததால் மனமுடைந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டார்களா, அல்லது சாதியப் பாகுபாடு காரணமாக அவர்கள் ஆணவக் கொலை செய்யப்பட்டார்களா என்ற இருவேறு கோணங்களில் பொறையார் போலீசார் தற்போது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
