தன்னுடன் பணிபுரியும் சக செவிலியருக்குத் தூக்க மாத்திரை கலந்த காளான் சூப் கொடுத்து 6 சவரன் தங்கச் சங்கிலியைத் திருடிய புகாரில், எழும்பூர் அரசு மருத்துவமனை செவிலியர் நான்சி நிஷா கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சுனிதா என்பவர், நான்சியின் வீட்டிற்குச் சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது. சூப் குடித்த சிறிது நேரத்தில் சுனிதா மயக்கமடைந்த நிலையில், அவர் அணிந்திருந்த நகையை நான்சி திருடியுள்ளார்.
போலீசாரின் விசாரணையில், நான்சி நிஷா ஏற்கனவே மற்றொரு செவிலியரிடமும் இதுபோன்று கைவரிசை காட்டி கடந்த வாரம்தான் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது தெரியவந்தது. தற்போது அவரிடமிருந்து 6 சவரன் நகையை மீட்ட போலீசார், அவரை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
