வங்காளதேசத்தின் ரங்பூர் நகரில், ஓய்வுபெற்ற ஆசிரியரான கணேஷ் சக்ரவர்த்தி மற்றும் அவரது மனைவி பிரீதிலதா, பிள்ளைகளான ஆகாமி, பிரியம் ஆகிய நால்வரும் கொடூரமான முறையில் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வீட்டின் மொட்டை மாடியில் மர்ம நபர்கள் சிலர் போதைப்பொருள் பயன்படுத்துவதைப் பார்த்த ஆசிரியர், அவர்களைக் கடுமையாக எச்சரித்துத் தடுத்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், தங்களின் கூட்டாளிகளையும் வரவழைத்து ஒட்டுமொத்த குடும்பத்தையும் ஈவுஇரக்கமின்றி கொலை செய்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக முக்தோ, சித்தார்த் ஆகிய இரு முக்கியக் குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கூட்டுப் படுகொலையை அரங்கேற்றிய கொலையாளிகள், சற்றும் மனசாட்சியின்றி கொலை நடந்த அதே வீட்டிலேயே இரவு முழுவதும் சாதாரணமாகத் தங்கியிருந்துள்ளனர். அங்குள்ள குளியலறையிலேயே குளித்துவிட்டு, வீட்டில் இருந்த உணவையும் சாப்பிட்டுள்ளனர். மேலும், காவல்துறையினரைத் திசைதிருப்புவதற்காகவும், இதனை ஒரு கொள்ளைச் சம்பவமாக மாற்றுவதற்காகவும் வீட்டிலிருந்த பொருட்களை எல்லாம் திட்டமிட்டு அங்குமிங்கும் சிதறடித்துள்ளனர். பின்னர், பொழுது விடிந்ததும் யாருக்கும் சந்தேகம் வராதபடி அமைதியாக அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். ஈடிணையற்ற இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
