சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த கொங்கணாபுரம் அருகே உள்ள எருமைப்பட்டி கிராமம் பகுதியை சேர்ந்த முத்துவேல் (60) என்பவர் அதே பகுதியில் உள்ள அவருடைய சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வாழ்க்கை நடத்தி வருகிறார். இவருக்கும் இவருடைய அண்ணன் மகனான குப்புசாமிக்கும் அவர்களுடைய பூர்வீக நிலத்தை பங்கு பிரிப்பதில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் இரண்டு குடும்பத்தினரும் பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளன. இந்நிலையில் ஒரே பகுதியில் வசிக்கும் அண்ணன் மகன் குப்புசாமிக்கும் முத்துவேலுக்கும் இடையே நில தகராறு அடிக்கடி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் அப்பம் பக்கத்தினர் இவர்களை சமாதானம் செய்துள்ளனர்.
அதனைப் போலவே நேற்று இரவும் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். அதில் ஆத்திரம் அடைந்த குப்புசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சித்தப்பா முத்துவேலுவின் மார்பகத்தின் மீது சரமாரியாக குத்தியதில் படுகாயம் அடைந்த முத்துவேல் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார்.
அவரை உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமுறைவாக உள்ள குப்புசாமியை தேடி வருகின்றனர். நில தகராறில் அண்ணன் மகனே தன்னுடைய சொந்த சித்தப்பாவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
