“சுடுகாட்டு பூஜை… நள்ளிரவு மந்திரங்கள்”… அதிகாலையில் அகோரி வீட்டுக்குச் சென்ற வாலிபர்… அடுத்து நடந்த உச்சக்கட்ட பயங்கரம்…!

By Nanthini on மாசி 11, 2026

Spread the love

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகேயுள்ள பேயன்பட்டி ஜீவா நகரைச் சேர்ந்த நந்தகுமார் (26) என்ற வாலிபர், கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி கழுத்தில் குத்தப்பட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். கூலி வேலை செய்து வந்த அவர், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். குன்றக்குடி போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் நேரடி மேற்பார்வையில் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

ஆரம்பத்தில், இந்தப் படுகொலை ஒரு பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். ஏனெனில், கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஜெயராமன் என்பவரது கொலை வழக்கில் நந்தகுமார் சம்பந்தப்பட்டிருந்ததும், அவர் சமீபத்தில்தான் சிறையிலிருந்து பிணையில் வெளிவந்ததும் தெரியவந்தது. பழைய பகையினால் எதிர்த்தரப்பினர் இவரைக் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முன்னெடுத்தபோதுதான், வழக்கில் முற்றிலும் எதிர்பாராத ஒரு திருப்பம் ஏற்பட்டது.

   

இந்தக் கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 65 வயதான ‘மண்டை ஓடு’ பாண்டி என்பவரை போலீசார் கைது செய்தனர். நள்ளிரவில் சுடுகாட்டுப் பகுதியில் பூஜைகள் செய்வது மற்றும் கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் கொண்ட இவர், ஒரு அகோரி போல வாழ்ந்து வந்துள்ளார். சம்பவத்தன்று அதிகாலை நேரத்தில், மண்டை ஓடு பாண்டியின் வீட்டிற்குச் சென்ற நந்தகுமார், அவரிடம் கஞ்சா கேட்டுத் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

   

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மண்டை ஓடு பாண்டி தான் இடுப்பில் வைத்திருந்த கத்தியால் நந்தகுமாரின் கழுத்தில் பலமாகக் குத்தியுள்ளார். காயத்துடன் தப்பிக்க முயன்ற நந்தகுமார், தனது இருசக்கர வாகனத்தில் சிறிது தூரம் சென்ற நிலையில் ரத்தப்போக்கு மற்றும் மயக்கம் காரணமாக நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். பழிக்குப் பழி கொலையாகக் கருதப்பட்ட இந்தச் சம்பவம், கஞ்சா தகராறில் ஒரு முதியவரால் நடத்தப்பட்ட கொலை என்பது தெரியவந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.