வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த கொல்லமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 30 வயது ராகவன், செங்கல் சூளையில் பணியாற்றி வந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுவேதா என்பவரை காதலித்து, கடந்த 2022-ஆம் ஆண்டு இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்துகொண்டார். சுவேதா செவிலியராகப் பணியாற்றி வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி நள்ளிரவில் பசுமாத்தூர் ரயில்வே மேம்பாலத்தில் ராகவன் தலை நசுங்கிய நிலையில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக மாவட்ட எஸ்பி சிவராமன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்தபோது, ராகவனின் மாமனார் அமுல்ராஜ் மீது சந்தேகம் எழுந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், குடும்பப் பிரச்சனை காரணமாக தனது நண்பர் கார்த்திக் என்பவருடன் இணைந்து ராகவனைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.
கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தபோது, ராகவனுக்குப் போதிய வேலை இல்லாததோடு மதுப் பழக்கத்திற்கும் அடிமையாகி இருந்ததாகத் தெரிகிறது. மேலும், அவர் தனது மனைவி சுவேதாவை அடிக்கடி அடித்துத் துன்புறுத்தியதுடன், பல பெண்களுடன் திருமணத்திற்கு மீறிய தொடர்பில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை மாமனார் அமுல்ராஜ் பலமுறை கண்டித்தும், ராகவன் தனது போக்கை மாற்றிக்கொள்ளாததால் ஆத்திரமடைந்த அமுல்ராஜ் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட அமுல்ராஜை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இக்கொலையில் தலைமறைவாக உள்ள நண்பர் கார்த்திக் மற்றும் தொடர்புடைய மற்ற நபர்களைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். காதலித்து கரம் பிடித்த மனைவியின் தந்தையாலேயே இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
