திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே அரங்கேறியுள்ள இந்த அதிர்ச்சி மரணம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கே. அத்திக்கோம்பை பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் பெருமாள், கடந்த ஜனவரி 30-ஆம் தேதி சம்பளப் பணம் வாங்கி வருவதாகக் கூறிச் சென்றவர் மர்மமான முறையில் காணாமல் போனார். அவரது செல்போனைத் தொடர்பு கொண்டபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவர் மயங்கி விழுந்துவிட்டதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் தேடிச் சென்றபோது, நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தின் அடியில் பெருமாள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பெருமாளின் உடல் கண்டெடுக்கப்பட்ட விதம் காண்போரை உலுக்கும் வகையில் இருந்தது. அவரது ஆணுறுப்பு சிதைக்கப்பட்டும், தலையில் கல்லைத் தூக்கிப் போட்டும் மிகக் கொடூரமாக அவர் கொலை செய்யப்பட்டிருந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இடையகோட்டை காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் இறங்கினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பெருமாளுடன் ஹாலோ பிளாக் கம்பெனியில் வேலை பார்த்து வந்த ஸ்ரீதர் என்பவர் மீது சந்தேகம் எழுந்தது. அவரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தபோது, திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. பெருமாளும் ஸ்ரீதரும் நண்பர்களாகப் பழகி வந்த நிலையில், அவர்களுக்குள் அவ்வப்போது ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருவரும் மது அருந்திவிட்டு நங்காஞ்சி ஆற்றுப் பகுதியில் தனிமையில் இருந்தபோது, அவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஸ்ரீதர் பெருமாளைக் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளார். மேலும் ஆத்திரத்தில் அவரது ஆணுறுப்பைச் சிதைத்துவிட்டு, உடலை ஆற்றுக்குள் வீசிச் சென்றது விசாரணையில் உறுதியானது. தற்போது கைதான ஸ்ரீதரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓரினச் சேர்க்கை விவகாரத்தில் நண்பரே சக தொழிலாளியைக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் ஒட்டன்சத்திரம் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
