மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணின் 6 வயது மகனை, அந்த நபர் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியையே உறைய வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண், தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் அதற்குத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர், கடந்த ஞாயிற்றுக்கிழமை அப்பெண்ணின் 6 வயது மகனைக் கடத்திச் சென்றுள்ளார்.
சிறுமவன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த தாய் போலீசில் புகாரளித்தார். போலீசாரின் தீவிரத் தேடுதல் வேட்டையில், ஒரு நீல நிற பிளாஸ்டிக் டிரம்முக்குள் சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அந்த நபர் சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, உடலை டிரம்முக்குள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அந்த நபரைப் பிடிக்கப் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
