சமூக வலைதளங்களில் ‘முன்னாள் முஸ்லிம்’ எனத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு, மதம் மற்றும் தீவிரவாதம் குறித்துப் பேசிப் புகழ்பெற்ற யூடியூபர் சலீம் வாஸ்திக் என்பவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் காசியாபாத்தில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் தாக்கப்பட்ட நிலையில், அவர் மீதான விசாரணையில் 31 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு அதிர்ச்சிகரமான கொலை வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் 1995-ல் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரின் 13 வயது மகனைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1995-ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி, டெல்லி சிமெண்ட் வியாபாரியின் மகன் சந்தீப் பன்சால் கடத்தப்பட்டார். சிறுவனை விடுவிக்க 30,000 ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், தற்காப்புக் கலை ஆசிரியராகப் பணியாற்றி வந்த சலீம் கான் (தற்போதைய சலீம் வாஸ்திக்) மற்றும் அவரது நண்பர் அனில் ஆகியோர் சிறுவனைக் கடத்திக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். சிறுவனின் உடல் சாக்கடையிலிருந்து மீட்கப்பட்ட நிலையில், 1997-ல் நீதிமன்றம் சலீமுக்கு ஆயுள் தண்டனை விதித்தது. ஆனால், 2000-ஆம் ஆண்டு இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த சலீம், அதன்பின் தலைமறைவாகித் தன்னைத் தானே இறந்துவிட்டதாக அறிவித்துக் கொண்டார்.
அதன்பின்னர் சலீம் வாஸ்திக் என்ற புதிய பெயரில் காசியாபாத்தில் துணிக்கடை நடத்தி வந்த அவர், யூடியூபராகவும் சமூக ஆர்வலராகவும் உருவெடுத்தார். அவரது இந்த ‘மாற்று வாழ்க்கை’ பாலிவுட் தயாரிப்பாளர் ஒருவரை ஈர்த்ததால், அவரது கதையைத் திரைப்படமாக எடுக்க 15 லட்சம் ரூபாய் முன்பணமும் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த மாதம் அவர் மீது நடத்தப்பட்ட கொலை முயற்சித் தாக்குதல் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. அவரது கைரேகைகள் மற்றும் பழைய ஆவணங்களை ஒப்பிட்டுப் பார்த்த போலீசாருக்கு, அவர் 31 ஆண்டுகளுக்கு முன்பு தப்பிய கொலைக் குற்றவாளி என்பது தெரியவந்தது.
சலீம் மத நிந்தனை செய்ததாகக் கூறி ஜீஷான் மற்றும் குல்பாம் என்ற சகோதரர்கள் அவரைக் கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த சலீம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது பழைய கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், சலீமைத் தாக்கிய அந்த இரு சகோதரர்களும் போலீசாருடன் நடந்த தனித்தனி என்கவுண்டர்களில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு யூடியூபரின் புகழுக்கு பின்னால் மறைந்திருந்த 30 ஆண்டு காலக் கொலை மர்மம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
