“அம்மாவை கொன்னுட்டாங்க இப்போவாவது வாங்க”…. மனைவியை வெட்டிவிட்டு கணவர் செய்த காரியம்…. பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த பயங்கரம்…..!

By Nanthini on மாசி 20, 2026

Spread the love

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே தேன்பாக்கம் கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக மனைவியை அவரது கணவரே அரிவாளால் வெட்டியுள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேன்பாக்கத்தைச் சேர்ந்த 50 வயது தன்சிங், எவ்வித வேலைக்கும் செல்லாமல் இருந்த நிலையில், அவரது மனைவி ஜோதி வீட்டு வேலைகள் செய்து கஷ்டப்பட்டு தனது இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். சென்னையில் வசித்து வந்த இவர்கள், கடந்த 2023-ஆம் ஆண்டு கடன் தொல்லை காரணமாக மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பியுள்ளனர்.

சொந்த ஊரில் இருந்த பழைய வீட்டை ஜோதி கடன் வாங்கிப் புதுப்பித்த நிலையில், அந்த வீட்டில் தன்சிங் தனது சகோதரி குடும்பத்தைத் தங்க வைத்துள்ளார். இதற்கிடையில், சென்னையில் இருந்த கடன் சுமையைக் குறைக்க அந்த வீட்டை வங்கியில் அடமானம் வைக்க ஜோதி முயற்சி செய்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தன்சிங், தனது மனைவி மற்றும் மகள்களை ஊருக்குள் நுழைய விடாமல் அடித்து மிரட்டி வந்துள்ளார். இது குறித்து ஏற்கனவே அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

   

இந்நிலையில், வங்கி அதிகாரிகள் வீட்டை ஆய்வு செய்ய வருவதையொட்டி, பாதுகாப்பு கருதி ஜோதி இரண்டு பெண் வழக்கறிஞர்களுடன் அச்சிறுப்பாக்கம் போலீசாரின் உதவியை நாடியுள்ளார். அவர்களின் முன்னிலையில் நில அளவை பணிகளை முடித்துவிட்டு ஜோதி திரும்பிக்கொண்டிருந்த போது, சற்றும் எதிர்பாராத விதமாக தன்சிங் மற்றும் அவரது தம்பி ஏழுமலை ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் வந்து வழிமறித்துள்ளனர். மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜோதியை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

   

இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஜோதியை மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ள நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த கணவர் தன்சிங்கை கைது செய்துள்ளனர். மேலும், இந்த தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த அவரது தம்பி ஏழுமலையைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். குடும்பப் பிரச்சனைக்காக மனைவியைக் கொலை செய்யத் துணிந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.