மும்பையில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பையின் கோரேகான் மேற்கு பகுதியில் உள்ள பகத்சிங் நகரில், அதிகாலை 3 மணியளவில் மக்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு வீட்டில் திடீரென தீப்பற்றியது. இந்தத் தீ மளமளவென வீட்டின் தரைத்தளம் மற்றும் முதல் தளம் முழுவதும் பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து மீட்டபோது, துரதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த மூவரும் உயிரிழந்திருந்தனர்.
இந்த கோர விபத்தில் சஞ்சோக் பவாஸ்கர் (48), ஹர்ஷதா பவாஸ்கர் (19) மற்றும் குஷால் பவாஸ்கர் (12) ஆகிய மூவர் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்பட்டவுடன் அப்பகுதி மக்கள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றபோதும், தீயின் வீரியம் அதிகமாக இருந்ததால் உயிரிழப்புகளைத் தடுக்க முடியவில்லை. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்டமாக சந்தேகிக்கப்படும் நிலையில், இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
