மும்பை மலார்ட் பகுதியில் உள்ள இன்ஆர்பிட் மால் சிக்னல் அருகே செவ்வாய்க்கிழமை காலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆதித்யா என்பவரின் ஹெல்மெட் மீது, எங்கிருந்தோ கூர்மையான இரும்புத் துண்டு ஒன்று விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி அவர் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். இரும்புத் துண்டு தாக்கியதால் சேதமடைந்த தனது ஹெல்மெட்டின் புகைப்படங்களைப் பகிர்ந்த அவர், நகரச் சாலைகள் மற்றும் மேலடுக்கு உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பின்மை குறித்து தனது எக்ஸ் (X) தளப் பக்கத்தில் மிகுந்த கவலையுடன் பதிவிட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்துப் பதிவிட்டுள்ள ஆதித்யா, “நல்லவேளையாக நான் ஹெல்மெட் அணிந்திருந்தேன்; இல்லையெனில் கடுமையான காயம் ஏற்பட்டிருக்கும் அல்லது மிகப்பெரிய அசம்பாவிதம் நடந்திருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த இரும்புத் துண்டு மேலிருந்து விழுந்ததா அல்லது வேறு வாகனத்தில் இருந்து எகிறி வந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எனினும், சாலைகளில் தினமும் பயணிப்பது அச்சமூட்டும் அனுபவமாக மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், சிவில் நிர்வாக அதிகாரி அஸ்வினி பிடேவை தனது பதிவில் டேக் செய்து நகரின் உள்கட்டமைப்பு பாதுகாப்பு குறித்து கவனம் ஈர்த்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலான இந்தச் செய்தியைத் தொடர்ந்து, பலரும் அவர் பாதுகாப்பாக உயிர் தப்பியதற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், அவரது ஹெல்மெட்டில் ஒட்டப்பட்டிருந்த “விபத்து ஏற்பட்டால் மருத்துவப் பணியாளர்களைத் தவிர வேறு யாரும் ஹெல்மெட்டைக் கழற்ற வேண்டாம்” என்ற விழிப்புணர்வு வாசகம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. விபத்தின் போது ஹெல்மெட்டை அவசரமாகக் கழற்றுவது கழுத்து மற்றும் தலைக் காயங்களை தீவிரமாக்கும் என்பதால், இந்த எச்சரிக்கை வாசகத்திற்குப் இணையவாசிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
