காரைக்கால் அடுத்த கோட்டுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் பால மணிகண்டன் என்ற மாணவன் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 2022-ஆம் ஆண்டு அந்த பள்ளி ஆண்டு விழா ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு வீட்டிற்கு சென்ற சிறுவன் தனது தாயிடம் குளிர்பானத்தை குடித்ததில் இருந்து மயக்கமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்த மாணவனை அவரது தாய் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இதனையடுத்து குளிர்பானத்தை கொடுத்தது யார் என்பது குறித்து விசாரித்த போது பள்ளியின் காவலாளி குளிர்பானத்தை கொடுத்தது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவனின் தாய் குளிர்பானத்தை தான் யாரிடமும் கொடுத்து அனுப்பவில்லை எனக் கூறி பள்ளி காவலாளியிடம் விசாரிக்க சென்றார். அப்போது அங்கு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பால மணிகண்டன் வகுப்பில் படிக்கும் சக மாணவியின் தாய் சகாயராணி விக்டோரியா தன்னை பால மணிகண்டனின் தாய் எனக்கூறி காவலாளிடம் குளிர்பானத்தை கொடுக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இதனால் போலீசார் சகாய ராணியை பிடித்து விசாரித்த போது அவர் கூறியதாவது, தனது மகளை விட பாலமணிகண்டன் சிறப்பாக படித்ததால் கோபத்தில் குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து கொடுத்ததாக கூறியுள்ளார். இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மாணவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கினை விசாரித்த காரைக்கால் நீதிமன்றம் சகாயராணிக்கு ஆயுள் தண்டனையும், 20000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவு பிறப்பித்தது
