செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய் மற்றும் மகள் இருவரும் ஒரே இருசக்கர வாகனத்தில் கீரப்பாக்கத்தில் இருந்து ஊரப்பாக்கம் நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை சுவாதி ஓட்டிச் சென்றுள்ளார்.
காரணைப்புதுச்சேரி-அருங்கால் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற அரசுப் பேருந்தை சுவாதி முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த தனியார் பள்ளிப் பேருந்து, இவர்கள் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட தேவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த மகள் சுவாதியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் மற்றும் மகள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தாம்பரம் போக்குவரத்துப் போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
