கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவமனையில் ஊழியராகப் பணிபுரிந்து வரும் ரம்யா உல்லாஸ் என்ற பெண், நாகேந்திரா என்ற வாலிபருடன் வாடகை கார் ஒன்றில் பெங்களூருவிலிருந்து அங்கோலா நோக்கிப் புறப்பட்டுள்ளார். கார் துமகூரு அருகே வந்துகொண்டிருந்தபோது, இருவருக்கும் இடையே திடீரென கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த நாகேந்திரா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ரம்யாவை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரம்யா, சமயோசிதமாகச் செயல்பட்டு காருக்குள் வெடிகுண்டு இருப்பதாக ஓட்டுநரிடம் எச்சரித்துவிட்டு, ஓடும் காரில் இருந்து கீழே குதித்துத் தப்பியுள்ளார்.
பெண்ணின் எச்சரிக்கையைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் பிரவீன், உடனடியாக காரை நிறுத்திவிட்டு வெளியே குதித்து உயிர் தப்பினார். அவர்கள் இருவரும் காரை விட்டு வெளியேறிய அடுத்த சில நொடிகளில், காருக்குள் இருந்த நாட்டு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபரீத வெடிவிபத்தில் கார் முற்றிலும் தீப்பற்றி எரிந்து, அடையாளம் தெரியாத அளவுக்கு உருக்குலைந்தது. காருக்குள்ளேயே மாட்டிக்கொண்ட வாலிபர் நாகேந்திரா, சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
கத்தியால் குத்தப்பட்டு காயமடைந்த ரம்யா தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காருக்குள் நாட்டு வெடிகுண்டு எப்படி வந்தது, அதனை நாகேந்திரா எதற்காகக் கொண்டு வந்தார் மற்றும் இந்த கொடூரத் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மை என்ன என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
