தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026-27-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கையை (வேளாண் பட்ஜெட்) வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். தனது பட்ஜெட் உரையின் தொடக்கத்தில் முதலமைச்சர் விஜய்யைப் பலவாறாகப் புகழ்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தை உலகளவில் பெருமையடையச் செய்தவர் என்றும், பணநாயகத்தை வீழ்த்திய பாமரர்களின் ஜனநாயக நாயகன் என்றும் அவருக்குப் புகழாரம் சூட்டினார். மேலும், உயர்ந்த எண்ணங்களோடு செயல்பட்டு ஊழலை வேரறுக்கும் முதலமைச்சரை ‘கோட்-சூட் அணிந்த விவசாயி’ எனக் குறிப்பிட்ட அவர், சட்டமன்றத்தின் உண்மையான நாயகனாக முதலமைச்சர் திகழ்கிறார் என்று பெருமிதத்துடன் உரையைத் தொடங்கினார்.
மேலும் தனது உரையில் கவித்துவமான வரிகளால் முதலமைச்சரைப் பாராட்டிய அமைச்சர் வினோத், ‘விசில்’ என்பது வெறும் ஒலியல்ல, அது பாமர மக்களின் உலகளாவிய மொழி என்றும், மனித குலம் பயன்படுத்திய முதன்மைத் தகவல் தொடர்பு ஊடகம் என்றும் வருணித்தார். தனியாக ஒலித்தாலும் கம்பீரத்துடனும், அணியோடு சேரும்போது அடக்கத்துடனும் திகழும் விசில், நேர்மையான நிர்வாகத்தின் குறியீடு என்றார். ஊரெங்கும் நிலவும் ஊழலை ஒழித்து, மக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து, நேர்மை வழியில் தமிழகத்தைச் செலுத்துவதே முதலமைச்சரின் முதன்மை லட்சியம் எனக்கூறி, வேளாண் பட்ஜெட் உரையை அமைச்சர் உற்சாகத்துடன் வாசித்தார்.
